மரவண்டின் ரீங்காரம்

September 15, 2007

Krishna chandar songs

Filed under: songs — மரவண்டு @ 11:55 am

கிருஷ்ணச்சந்தர் தமிழில் வெகு சொற்பமான பாடல்கள் பாடியிருந்தாலும் மிகவும் நல்ல பாடல்களைப் பாடிச் சென்றிருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்த 8 பாடல்களை இங்கே வலையேற்றம் செய்திருக்கிறேன். கேட்டு மகிழுங்கள்

0

1) வான் சிவந்தது – அன்பின் முகவரி
2) ஏதோ மோகம் – கோழி கூவுது
3) பூவாடைக்காற்று – கோபுரங்கள் சாய்வதில்லை
4) நாளும் என்மனம் – நிலவு சுடுவதில்லை
5) சிருங்கார சங்கீதமே – மல்லிகை மோகினி
6) தென்றல் என்னை – ஒரு ஓடை நதியாகிறது
7) ஆனந்த மாலை – தூரத்துப் பச்சை
8] அள்ளி வச்ச மல்லிகையே – இனிமை இதோ இதோ

0

கேள்வி
———
அச்சமில்லை அச்சமில்லை என்ற திரைப்படத்தில் வரும்
“கையில காசு வாயில தோசை” என்ற பாடலை
இயற்றியவர் யார் ?

September 2, 2007

நகுலனை நோக்கிய ஒரு பயணம் – வெளி ரெங்கராஜன்

Filed under: Uncategorized — மரவண்டு @ 4:43 pm

நகுலனுக்கு உடல்நலம் சரியில்லை என்று செய்திகள் வந்து கொண்டிருந்தன . ஒரு குறிப்பிட்ட செய்தியில் ” நான் இறந்த பிறகு எனக்கு கூட்டம் நடத்த வேண்டாம். ஏனென்றால் என்னால் அந்தக்கூட்டத்துக்கு வர முடியாது “ என்று நகுலன் சொல்லியிருந்ததாக ஒரு குறிப்பு இருந்தது. நகுலன் மீது மிகுந்த அபிபானம் இருந்தும் அவரைச் சந்திக்க வாய்ப்பில்லாமல் இருந்த எனக்கு அப்படி ஏதாவது நடந்துவிடுமோ என்கிற பயம் ஏற்பட்டது. அவரை சீக்கிரம் சந்திப்பதற்கான ஒரு வாய்ப்புப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.நான் அப்போது சூரத்தில் இருந்தேன் . அப்போது தான் அவருடைய ரோகிகள் நாவலை நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரும்பவும் படித்துக் கொண்டிருந்தேன் . அந்த சந்தர்ப்பத்தில் நோயாளிகளின் உலகம் பற்றிய அந்த நாவலின் ஒவ்வொரு வரியும் விசேஷ அர்த்தங்கள் கொண்டு மனதை அலைக்கழிக்க ஆரம்பித்தன . நகுலன் எப்போதும் தன்னிலை சார்ந்த மொழியிலேயே எழுதிக் கொண்டிருந்தாலும் தன்னிலிருந்து விலகிய ஒரு அழகியல் தூரத்தை தன்னுடைய எழுத்தில் எப்போதும் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதே அவருடைய கலையின் வசீகரம் என்பதாகவே அவரைப் பற்றி என் மனதில் பதிவாகி இருந்தது. ரோகிகள் நாவல் அதை மெய்ப்பித்துக் கொண்டிருந்தது. வலி , வேதனை, வாழ்க்கை பற்றிய பயம் , மனிதர்களின் மீது வெறுப்பு தூக்கமின்மை ஆகியவற்றால் சூழப்பட்ட நோயாளிகளின் நடுவே தன்னையும் ஒருவனாக இருத்திக்கொண்டு உணர்ச்சிகளில் ஆழ்ந்துவிடாமல் சலனமின்றி எல்லாவற்றையும் இயல்பாகப் பார்க்கக்கூடிய ஒரு பார்வையை நகுலன் அந்த நாவலில் வெளிப்படுத்தி இருந்தார். வாழ்க்கை மனித உடலை சார்ந்திருக்கிறது என்கிற நிதர்சனமான உண்மை மனச்சுமைகளை கொஞ்சம் தொலைவில் நிறுத்த முடியும் என்கிற பாவனை நாவலில் வெளிப்பட்டது. வாழ்க்கையின் சிறுசிறு அசைவுகள் குறித்தும் இலக்கிய மொழி குறித்தும் நகுலனின் கவனம் ஒரு ஆழ்ந்த பிடிப்பை ஏற்படுத்தியது . எளிமையும் , புதிர்த்தன்மையும் கொண்டு தமிழ்ச்சூழலின் ஆர்ப்பாட்டமான அங்கீகரிப்புக்கு அப்பாற்பட்டவராக வசீகரமும் ஈர்ப்பும் கொண்ட ஒரு நகுலனின் சித்திரம் தொடர்ந்து மனதை வருத்திக் கொண்டிருந்தது.

யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது ?

என்ற அவருடைய கவிதை வரிகள் ஒரு தனிமையின்
பிரம்மாண்டத்தை ஒலித்தபடி இருந்தன .

திடீரென்று அமெரிக்க தமிழ் இலக்கிய நிறுவனமான விளக்கில் இருந்து சென்ற ஆண்டுக்கான பரிசுக்குரியவரை தெரிவு செய்ய ஒத்துழைக்கும்படி தகவல் வந்தது . ஒவ்வொரு ஆண்டும் தமிழ் இலக்கியத்துக்கு சிறப்பான பங்களிப்பு செய்த ஒரு படைப்பிலக்கியவாதிக்கு ரூ 25000 பரிசு வழங்கி கெளரவிக்கும் அமைப்பு அது . இங்கிருந்து சென்ற கோ.ராஜாராம் , நா.கோபால்சாமி மற்றும் சில தமிழ்
ஆர்வலர்களைக் கொண்ட ஒரு சிறு நண்பர்கள் குழு அது .
சென்ற முறை கோவை ஞானிக்கு பரிசளித்த பிறகு பரிசளிப்புகள் தொடருமா , தொடராதா என்கிற நிச்சயமற்ற தன்மையில் ஒரு சிறிய இடைவெளி ஏற்பட்டிருந்தது . ஏற்கனவே திண்ணை.காம் என்கிற இணைய தளத்தில் தமிழ் படைப்பிலக்கிய முயற்சிகளைப் பரவலாக அறிமுகப்படுத்தும் பணியில் கோ.ராஜாராம் ஈடுபட்டிருந்தார். அவரையும் என்னையும் தவிர தேர்வுக்குழுவில் இருந்த மற்றொருவர் கவிஞர் இன்குலாப்.ஏற்கனவே சி.சு.செல்லப்பா , பிரமிள் , கோவை ஞானி ஆகியோரை தேர்ந்தெடுத்ததின் மூலம் நிறுவனங்களின் பின்புலமின்றி தன்னுடைய இலக்கிய நம்பிக்கைக்களுக்காக சமரசமின்றிப்
பாடுபடும் தனிமனித உழைப்பை கெளரவிப்பதை விளக்கு ஒரு மரபாகக் கொண்டிருந்தது. இவர்கள் பரிசளிக்கும் நம்முடைய அரசு நிறுவனங்களின் பார்வையிலிருந்தும் , விதிமுறைகளிலிருந்தும் தப்பிவிடக்கூடியவர்கள் . இவர்கள் பரிசுக்காக காத்திருப்பவர்களும் அல்ல . புறக்கணிப்பும் அதிகார வழிபாடும் நிறைந்த சூழல் நம்முடையது . உண்மையான இலக்கியவாதிகளை இலக்கியம் சார்ந்த அமைப்புகள் தானே கெளரவிக்க இயலும் ?

நகுலனுக்கு இயல்பாக சேரவேண்டிய ஒரு விருதுடன்
அவரைச் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதாக எனக்குத் தோன்றியது. எழுத்தாளர் கோ.ராஜாராமிற்கு நகுலனுடைய தேர்வில் மறுப்பு இருக்க முடியாது என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது . ஆனால் கவிஞர் இன்குலாப் மாறுபட்ட நிலைப்பாடுகள் கொண்டவர் . நகுலனுடைய தேர்வு அவருக்கு உவப்பானதாக இருக்க முடியாது என்று எனக்குத் தோன்றியது . ஆனால் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக பிரபஞ்ச உறவுகள் குறித்தும் வாழ்க்கையின் இருண்மை குறித்தும் தீவிரமான அக்கறையுடன் செயல்பட்ட ஒரு இலக்கியவாதி கெளரவிக்கப்படுவது அவசியம் என்ற எங்கள் நிலைப்பாடைத் தன்னுடைய கருத்து முரண்பாடுகளுக்கிடையிலும் இன்குலாப் மிகவும் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார்.கருத்து மோதல்கள் ஒரு செறிவான தளத்தில் வெளிப்பட இயலாத சூழல் நம்முடையது .வியாபாரத்தனமும் அதிகார வழிபாடும் நம்முடைய எதிரிகளாக இருந்த சூழல் மாறி முத்துச்சாமியின் பாகப்பிரிவினை நாடகம் போல பூனைகள் அடித்துக்கொண்டு குரங்கிடம் அப்பம் கொடுத்த கதை நம்முடையது. இத்தகைய சூழலில் ஒரு எளிய , தீவிர இலக்கியவாதிக்காக முரண்பட்ட நிலையிலும் இன்குலாப் வெளிப்படுத்திய கருத்து நாகரீகமும் பண்பாடும் மதிக்கப்படவேண்டியவை என்று கருதுகிறேன்.

கலைஞனின் மனம் என்பது ஒரே சமயத்தில் அங்கீகாரத்தை வேண்டுவதாகவும் அதே சமயம் அங்கீகாரத்தின் கவனம் கண்டு பின்னடைவதாகவுமே இருந்திருக்கிறது. விருதுக்கான செய்தியுடன் நான் நகுலனை திருவனந்தபுரத்தில் சந்தித்தபோது அவரிடமிருந்து வெளிப்பட்ட எதிர்வினை ” என்னை எப்படியாவது இந்த சிக்கலில் இருந்து விடுவியுங்களேன் ” என்பதுதான் . அவருடைய நினைவுத்திறன் பாதிக்கப்பட்டிருக்கிறது என்றெல்லாம் எழுதப்பட்ட பயங்களுக்கு நடுவே 25 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட சில கவிதைகளை நினைவு கூர்ந்து குழந்தையைப் போல அவர் சிரித்துக் கொண்டிருந்தார்.


தனியாக இருக்கத்
தெரியாத – இயலாத
ஒருவனும்
ஒரு எழுத்தாளனாக
இருக்க முடியாது

என்ற அவரது வரிகள் அவரது வீடு , முற்றம் எங்கும்
நிரம்பி வெவ்வேறு விதங்களில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன . ஒரு வழியாக அவருடைய சம்மதத்தைப் பெற்று விருது நிகழ்ச்சிக்காக அவரை அழைக்கவந்த போது வெண்ணிற உடையில் முகமலர்ச்சியுடன் அவர் எங்களை
எதிர்கொண்ட காட்சி நோயின் அடையாளங்கள் நீங்கிய ஒரு புது நகுலனைப் பார்ப்பது போல் இருந்தது.

பின்குறிப்பு :

மேற்காணும் கட்டுரை காலச்சுவடு இதழ் 34 ல்(மார்ச் – ஏப்ரல் 2001) வெளியானதாகும்.

நகுலனை முன்வைத்து கவிதையை அறிவது – எஸ்.ராமகிருஷ்ணன்

Filed under: Uncategorized — மரவண்டு @ 1:30 pm

வான்கோவின் சுடர்த்த மஞ்சள் மலர் ஓவியம் கண்ட பார்வையாளர் ஒருவர் இது யதார்த்தமாயில்லையே எனக் கேட்க , அவருக்கு வான்கோ சொன்ன பதில் ” I paint my Reality “.

0

இந்த பதில் கவிதையை அறிவதற்கும் பயன்படுமென நினைக்கிறேன். கவி-வாசகன் இரு நிலைகளிலும் உங்கள் யதார்த்தமாக எதை கொள்கிறீர்கள் என்பதே முதன்மையாக படுகிறது. ஒரு கவிதையைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதன் வழி எதை அறிந்து கொள்கிறோம் . ஜப்பானிய மரபில் கவிதைகள் குளத்தில் எறியப்படும் கல் என சலனமற்ற பரப்பின் அமைதியை , சமன்குலைய செய்கிறது.புதிய உருவொளி தோற்றம் கொள்கிறது . தமிழ் கவிதை வாசிப்பு எதை நிகழ்த்துகிறது ?

பாப்லோ நெருடா கவிதையை ” Art of Raining ” என்கிறார் .மழை என்பது தொடர் நிகழ்வுதானே. கவிதையைப் பற்றிய இந்த மூன்று வார்த்தைகள் அதன் முழுமையும் நம்மை தீண்டச் செய்துவிடுகிறதல்லவா.

நான் கவிதைகளை மிகக் குறைவாக வாசிக்கும் பழக்கம் உடையவன் . கதையில் கூடும் லயிப்பு எனக்கு கவிதையில்
கூடுவதில்லை . ஆயினும் தொடர்ந்த கவிதை வாசிப்பு எனக்கு அதன் சில முகங்களைக் காட்டி உள்ளது . அதன்படி கவிதையில் மையம் மிதந்து கொண்டிருக்கிறது . ஒன்றுக்கு மேற்பட்ட மையங்கள் கூட இருக்கின்றன.கவிதை காலவெளிகளின் அரூப புள்ளிகளை , அதன் குறியீடுகளை முன்வைக்கிறது. கவிதையின் குரல் கவிஞனின் குரல் எனக்கொள்ள முடியாது. கவிதையில் உருவாகும் நான், நீ , உலகம் யாவும் தனித்த உருவங்களாக உருக்கொள்வதில்லை . கவித்துவபார்வை வெளியாகும் கவிதை தனியான ஒளி கொண்டிருக்கிறது என்பது போன்ற எண்ணங்கள் கடக்கின்றன.

ஞாபகத்தின் மணிக்கூண்டில் எதுவுமோ மோதி எழுப்பும் ஓசைதான் கவிதையா ? அல்லது பெருவெடிப்பு போல் நிகழ்வு சிதறி கவிதையாகிறதா ? இப்படி கவிதை பற்றி யோசிக்கும் போதே வார்த்தைகளின் தேர்ந்த செதுக்கல் ஒலியும் , திகைப்பும் , எளிமையும் படிமங்களும் கவியத்துவங்கி விடுகின்றன.

வாழ்வை பகுதியாக இல்லாமல் முற்றாக கவ்வ நினைக்கும் கவிஞன் , அதே தொழிலை பிறிதொரு பணிக்காக மேற்கொள்ளும் தத்துவஞானியிடம் தான் அதிக ஈர்ப்பு கொள்கிறான். எளிமையான தத்துவஞானியின் வாசகம் எப்போதும் கவிஞனை நோக்கி ஈர்க்கக் கூடியது. அதைப் போன்ற வாசகத்தை எழுதிவிடவே ஆசைகொள்கிறது கவிஞனின் மனது ” விழித்திருப்பவனுக்கு இரவு நீண்டது ” என்கிறார் புத்தர். இந்த வாசகத்தின் எளிமையை , பன்முகத்தை , அதன் கூர்மையை கொணரவே கவிஞனின் உணர்கொம்புகளும் காகிதத்தில் நகர்கின்றன. இந்த நூற்றாண்டின் முன்வரை தத்துவத்தின் நிழல்படாத கவியாக எவரும் தமிழில் உருவாகவேயில்லை . பாரதியோடு இதன் தொடர்ச்சி முடிவுபெறுகிறது எனலாமா ?

பிச்சமூர்த்தி , மயன் , டி.கே.துரைசாமி , பிரமிள் என மரபு அறிந்த கவிஞர் பலரும் நவீன கவிதையான புதுக்கவிதையின் தொடக்க காலத்தில் கவிதையை எழுத முயன்ற போது அவர்களுக்குத் தடையாக இருந்தது அவர்களின் தத்துவ அறிதலே.பிச்சமூர்த்தியிடம் தத்துவம் மறைபொருளாவதற்குப் பதிலாக, கவிதையே மறைபொருளாகிவிட்டது.மயன் கவிதையில் தத்துவம் மேல்பூச்சாகிவிட்டது. பிரமிள் மட்டும் இதில் விதிவிலக்கு.
ஆயினும் இவரது தீவிரவேட்கை கவிந்தவை சில கவிதைகளே.பின்னர் டி.கே.துரைசாமி எனும் நகுலன்

நகுலன் கவிதைகளை வாசித்த நண்பர் ஒருவர் சொன்னது
” இவர் கவிதை என்று வேறு எதற்கு தனியாக எழுதுகிறார் ? “

இக்குரலின் பின்னனியில் அவர் கண்டுகொண்ட ஏதோவொன்று ஒளிந்துள்ளது. இவர் எழுதுவதெல்லாம் கவிதைதானே , அல்லது கதை கவிதை என நகுலனை பிரிக்கமுடியுமா ? கவிதை , கதை இரண்டும் ஒரே உலகின் வேறு தோற்றம்தானா ? இப்படி இப்படியாக பிரிந்து கிளை சென்ற போதும் , நண்பரின் வாசகம் என்னுள் ஏற்படுத்திய சலங்களை முதன்மையாக கொண்டு செயல்பட்ட போது எனக்கும் தோன்றியது , டி.கே.துரைசாமி என்ற நகுலன்
அப்படித்தானா ?

அதிகம் எழுதுவதில்லை நகுலன்; எனினும் தொடர்ந்து எழுதிவருபவர் . இன்றைக்குள்ள கவிகளில் மரபு பாடல்களும் , நவீன கவிதைகளும் எழுதிய சிலரில் ஒருவர். வாசிப்பில் எளிமையும், புரியாமையும் ஒருங்கே கொண்ட கவிதைகள் இவரது தனிச்சிறப்பு என ஒருகுரல் எப்போதும்
கேட்டுவருகிறது . தத்துவ தீண்டல் அதிகம் என அறிவுஜீவிகளும் அபத்தவாதி என நவீனவாதிகளும் , குழப்பவாதி என இடதுசாரிகளும் சொல்லிவரும் இவரின் கோட் ஸ்டாண்ட் கவிதைகள் , சுருதி , இரு நெடுங்கவிதைகள் , மூன்று , ஐந்து ஆகிய கவிதைத் தொகுதிகளை வாசித்ததின் ஊடே நகுலன் வழி கவிதையை அறிதல் முனைப்பு கொண்டது.

எதைத்தான் கவிதை என்கிறார் நகுலன். அவரே சொல்வது போல எல்லாக் கவிதைகளும் ஒரு அனுபவ புணர்சிருஷ்டி ” . இந்த செயல்பாடு எங்கே நிகழ்கிறது. நகுலனின் கவிதைகள் ஞாபகம் எனும் அரங்கில் அனுபவங்கள் திரட்டப்பட்டு கோர்க்கப்பட்டு, தைத்து , படையலிடப்பட்டு அடுக்கி வைக்கப்படுகின்றன.காலம் வெளிச்சார்ந்து நடைபெறும் இந்த தொடர் செயலை புணர்சிருஷ்டி என சொல்லும் பிறிதொரு நிகழ்வு மூலம் காலவெளியின் அடுக்குகளை மாற்றியும் கலைத்தும் , தொடர்பற்றும் தன் விருப்பம் போல அடுக்கிக் கொள்கிறார் நகுலன்.

நகுலன் கவிதை முதல் வாசிப்பிலேயே சில விஷயங்கள்
தெரிந்துவிடுகின்றன . இவர் படிமங்களை வெகு அரிதாகவே
கையாளுகின்றார் . பிரக்ஞையின் மேல் கீழ் நிலைகளில்
தாவி அலைவுகொள்வது இவர் கவிதை . சப்த நிசப்த வார்த்தை பின்னலை மேற்கொள்கிறார் . பல்வேறு எழுத்தாளர்களின் வரிகள் இவர் கவிதையில் ஊடுகலந்து செல்கின்றன. எள்ளலும் தனிமையும் எதன்மீதோ கொள்ளும் தீராத தவிப்பும் எல்லா கவிதைகளிலும் வெளிப்படுகின்றன என்பது போல சில அனுமானங்கள் ஏற்படுகின்றன.

இந்த கணிப்பு சில வாசிப்பிற்குப் பிறகு தந்து படிக்கட்டுகளை கீழே விரித்துக் கொண்டே செல்கின்றன . அதன் வழி உருவானவை இந்த குறிப்புகள்

குறிப்பு 1 :

பெரும்பாலான தமிழ் கவிஞர்கள் கவிதையினை படிமத்தின் மீது கட்டும் போது நகுலன் இதை கவனமாக விலக்குகிறார். இதை Palin Poetry எனலாமா ? பிரமிள் , பசுவய்யா , தேவதச்சன் , கலாப்ரியா, பிரம்மராஜன் போன்றவர்களை தேர்ந்த படிமங்களைக் கையாண்டவர்கள்
என்றால் நகுலன் , ஆனந்த் , விக்ரமாதித்யன் போல அரிதான
படிமங்கள் தென்படும் கவிதைகளை Palin Poetry எனலாம்

தத்துவம் எப்போதும் உண்மையை நேரிடையாக ஸ்பரிசிக்கச் சொல்கிறது . உவமை , படிமம் எல்லாம் அதை அடையமுடியாத தடைகள் என்கிறது . Palin Poetry க்கும் தத்துவத்திற்கும் நேரிடை உறவு உள்ளதா ? இந்த மூன்று கவிஞர்களையும் பார்த்தால் அந்த உறவு வெளிப்படையாகவே தெரிந்துவிடுகிறது . நகுலன் அத்வைதத்தில் ஈர்ப்புக்கொண்டிருக்கிறார் . விக்ரமாதித்யன் சைவசித்தாந்தத்தில் , ஆனந்திடம் அத்வைதமும் பிறவும் என கலப்பு தெரிகிறது அல்லது அத்வைதத்தை வேறு பாஷையில் பேசுகிறார்.

நகுலன் இதன் வழி அத்வைத மார்க்கத்தினை நோக்கி செல்லவில்லை.மாறாக அத்வைதம் பேசும் இரட்டை நிலை மீது வசீகரம் கொள்கிறார்


வழக்கம் போல்
எனது அறையில்
நான் என்னுடன் இருந்தேன்
கதவு தட்டுகிற மாதிரி
கேட்டது
யார் ? என்று கேட்டேன்
நான் தான் சுசிலா
என்றாள்

இக்கவிதையில் வரும் நான் என்னுடன் இருந்தேன் எனும் வரி முக்கியமானது. இதில் நான் | என் | இந்த இருவர் யார் ? ஒருவர் தானா ? இல்லை இருநிலையா ? எதில் கவிஞன் சுருண்டு இருக்கிறார்.” என்னுடன்” என்பதில் தான் எனப்படுகிறது. இதே கவிதையின் கடைசி வரியான “நான் தான் சுசிலா” என்பதில் உள்ள நான்”,நான் என்னுடன் இருந்தேன் வரியில் வரும் நான் , இரண்டும் ஒன்று எனக்கொண்டால் சுசிலா இல்லாமல் போவது தெரிகிறது. இக்கவிதையில் வழக்கம் போல என்ற வார்த்தையை போடுவதின் வழி இதில் உருவாகும் திகைப்பு கலைக்கப்படுகிறது

குறிப்பு 2 :

எழுதும் செயலை மேற்கொள்ளும் நபர் பிரக்ஞை நிலையிலே இயங்க முடியாது, அதன் வெளிமட்டத்தில் மிதப்பதை விட அடிமட்டத்தில் ஆழ்ந்து கிடக்கவே விரும்புகிறான். இந்த உள்நோக்கிய பயணத்திற்கு நகுலன் கொள்ளும் சாதனங்கள் பிராந்தி குப்பிகள் மற்றும் புத்தகவாசிப்பு. இரண்டின் வழியிலும் பிரக்ஞை நிலையானது சரிவு கொள்வது தவிர்க்க முடியாதது. பிரக்ஞையின் அடிப்பரப்பிற்கு செல்லும் போது நகுலன் சொல்கிறார்.

என்னிடமிருந்தே
நான் வந்துகொண்டும்
போய்க்கொண்டிருக்கிறேன்

இந்த நிலையை ஆலீஸின் அற்புத உலகில் பூனையின் சிரிப்பை ஆலிஸ் அது வந்து கொண்டும் , மறைந்து கொண்டிருப்பதை காண்கிறாள். பூனை இருப்பதும் இல்லாததும் தெரிகிறது அவளுக்கு.நகுலனிடம் இந்த பூனையின் தன்மையே காணமுடிகிறது.

என் | நான் என இருநிலை போல உள் | வெளி என அதே பிறிதொரு நிலையும் நகுலன் பேசுகிறார்.

வீட்டிற்கு உள்
இருந்தோம்
வெளியே நல்ல மழை
ஒரு சொரூப நிலை

இந்த சொரூபநிலை என்ற இயல்பான மயங்கின நிலையை தான் புத்தகம், பிராந்தி இரண்டும் ஏற்படுத்துகின்றன. தனது பிரக்ஞையை மஞ்சள் பூனையென ஒரு கவிதை வரியில் குறிப்பிடுவதை நாம் கவனிக்க வேண்டும்

குறிப்பு 3 :

முதுமை வந்து கதவை தட்டும்போது , எஜமானர் வீட்டில் இல்லை வேலைக்காரனை அனுப்பி துரத்தி விட்டால் எத்தனை செளகரியமாயிருக்கும் என்கிறது ஜப்பானிய கவிதை. இதைப் போன்ற மனநிலை கொண்டவையே நகுலனின் மரணம் பற்றிய கவிதைகள் . மரணம் பற்றி தொடர்ந்து எழுதும் இவர் இதை நிகழ்வாகவே , துண்டித்தலாகவோ பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . உடல் மீறிய செயல்பாடு என பார்ப்பதும்
வாழ்தல் | சாவு இரண்டும் எதிர்நிலையிலை ஒரே நிகழ்வின் இரட்டைக் களம் என கொள்வதும் புதிதாக உள்ளது.

ஒரு கட்டு வெற்றிலை , பாக்கு
சுண்ணாம்பு , புகையிலை
புட்டி பிராந்தி
நண்பா …
இந்த சாவிலும் ஒரு சுகம் உண்டு

என்ற வரியில் உள்ள சாவு நாம் அறிந்து வைத்திருக்கின்ற மரணமல்ல.

குறிப்பு : 4


சுசிலாவின் உயர்தன்மைகள்
சுசிலாவிடம் இல்லை

என பேசும் இவர் , கவிதையெங்கும் காணப்படும் சுசிலா எனும் பெண் பெயரைக் கொண்டு அதை பெண்ணாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை எனப்படுகிறது . இப் பெண்பெயர் உருவாக்கும் வார்த்தைச் சித்திரம் ஏற்கனவே உருவாகும் மனநிலையின் தீவிரத்திற்கு எதிர்நிலையாகவோ , சமன் செய்யும் ஒன்றாகவோ
பரிகசிக்கும் நிலையாகவோ கொள்ளலாம்.

ஒருவகையில் மரபுகவிதையில் வரும் வெண்சங்கே , பாம்பே, கிளியே , குதம்பாய் போல இதுவும் சுயஎள்ளல் குறியீடாக கொள்ளலாம் . சில இடங்களில் சுசிலா மூலம் ஏற்படுத்தும் நெருக்கம் பாரதியின் கண்ணம்மா என்ற வார்த்தை உருவின் செயல்பாடு போல தெரிகிறது.

0

என் குறிப்பு

மேற்காணும் கட்டுரை யாதுமாகி இதழில் (பிப்ரவரி – மார்ச் 1998) இடம் பெற்றதாகும் . இந்த இதழில் குறிப்புகள் 4 ஐத் தொடர்ந்து மேலும் சில குறிப்புகள் இருந்திருக்கலாம் . நான் வைத்திருக்கும் இதழில் இதனையடுத்த சில பக்கங்கள் எங்கோ தொலைந்துவிட்டன.

நகுலனின் வீட்டுப் புத்தகங்களைக் கரையான்கள் வாசிக்கின்றன – சூத்ரதாரி

Filed under: Uncategorized — மரவண்டு @ 8:11 am

நகுலனின் மறைவுக்கு நிறைய பதிவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தார்கள் . நண்பர் பாலசுப்ரா நகுலனைப் பற்றிய தகவல்களைத் தொகுத்து வெளியிட்டிருந்தார் . அவருக்கு எனது நன்றிகள். வலைப்பூவிற்கு இலக்கியம் என்று பெயர் வைத்துக் கொண்டு நகுலனைப் பற்றி எழுதாதது எனக்குக் கொஞ்சம் உறுத்தலாகவே இருந்து வந்தது.

சிற்றிதழ்களில் வெளியான நகுலனின் விமர்சனக் கட்டுரைகள் சிலவற்றைப் படித்திருக்கிறேன். மேலும் நகுலனின் சில கவிதைகள் படித்திருக்கிறேன்.

சாம்பல் சிற்றிதழில் சூத்ரதாரி எழுதிய கட்டுரை ஒன்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்

நகுலனின் வீட்டுப் புத்தகங்களைக் கரையான்கள் வாசிக்கின்றன. – சூத்ரதாரி – சாம்பல் சிற்றிதழ் (ஜனவரி – பிப்ரவரி – 2004)

கடந்த டிசம்பர் 6 அன்று திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரி வளாகத்தில் பெரும்பாலும் தமிழ்த்துறை மாணவர்களை மட்டுமே பார்வையாளர்களாகக் கொண்டு நிகழ்ந்த நகுலன் கருத்தரங்கிற்கு நகுலனை கைத்தாங்கலாக அழைத்து வந்திருந்தார்கள். கனிந்த நகுலன் திரும்ப குழந்தைப் பருவமெய்திய தோற்றத்திலிருந்தார் . கிட்டத்தட்ட ஒருமணி நேரம் கூட்டத்தில் இருந்தார். நிகழ்வுகளை உள்வாங்கிக் கொள்கிறாரா இல்லையா என்பதை அறிய இயலாத அளவிற்கு கனிவான புன்னகை மட்டுமே அவரது முகபாவமாக இருந்தது.வழக்கமான அவரது மூன்றடுக்கு நினைவுகளின் எந்த அடுக்கில் அவர் அங்கே உலவிக் கொண்டிருந்தார் என்பது பார்வையாளர்களால் கண்டு கொள்ள இயலாததாகவே இருந்தது. அவருக்கான ப.சிங்காரம் நினைவுப்பரிசை வாங்கிக் கொள்ள அந்தச் சிறுமேடையில் அவர் விருப்பப்படி ஏற்றுவிக்கப்பட்டார். கருத்தரங்கின் முடிவில் அழைத்துச் செல்லப்படுகையில் அந்நிகழ்வை அவர் உணர்ந்திருக்கவில்லை என்பதில் யாருக்கும் உள்ளூர ஐயமிருந்துருக்கவில்லை.

அதன் தொடர் நிகழ்வாக அன்று மாலை நாஞ்சில்நாடன், கி.அ.சச்சிதானந்தன். எம்.எஸ்.ஜெயமோகன் , வேதசகாயகுமார் , ஞானசேகரன் , நெய்தல் கிருஷ்ணன் , சூத்ரதாரி ஆகியோர் நகுலனை அவரது இல்லத்தில் சந்தித்தார்கள்.

“இதான் அவரோட பர்ணசாலை” என்று நாஞ்சில்நாடன் காட்டிய இடத்தில் பசிய இலைப்பரப்பு மூடிய ஒரு சரிவுதான் தென்பட்டது.ஒழுங்கற்ற மண்பாதையில் தலைமுட்டும் கிளைகளை விலக்கிக் கொண்டு இறங்கினால் அந்த வீடு கண்ணில் தென்படுகிறது . நிறைய மரங்கள் செடி கொடிகளுடன் ரம்மியமான தோட்டம் . ” பரவாயில்லையே தோட்டம் சுத்தமா இருக்கு ” நாஞ்சில்நாடன் படிகளில் ஏறுகிறார். வருபவர்களைக் கூர்ந்து பார்த்தபடி நகுலன் நின்றிருக்கிறார். இரட்டைத்தூண்கள் தாங்கிய முற்றத்தின் கீழ் அவரது நெடிசலான உருவம் மேலும் குறுகித் தெரிந்தது . “நீங்க யாரு ? ” நாஞ்சில் நாடனைக் கேட்கிறார். மறுபடி அவர் தன்னை சொல்லிக்கொண்டதும் ” ஆமா … வர்றேன்னு சொன்னிங்கல்ல ” என்று சிரித்துவிட்டு மற்றவர்களையும் பார்க்கிறார். . கி.அ.சச்சிதானந்தனை அறிமுகப்படுத்தும் போது ” யாரு கேரளக்கவியா ? ” என்கிறார் . அதே கண்ணாடி எப்போதும் சிரிப்புடனுமான முகம். வீட்டின் சுவர்களும் கூரையும் இருள் உலாவும் அறைகளும் பெரும்காலத்தின் மங்கிய புகைச்சுவடுகளைத் தாங்கியிருக்க , தன் கட்டிலில் அவர் மடங்கி உட்கார்ந்திருக்கிறார் . எல்லோரையும் கவனமாகப் பார்க்கிறார்.சிரிக்கிறார். உடன் வந்திருந்த நெய்தல் கிருஷ்ணனிடம் , ” தப்பா நினைச்சுக்கப்படாது , ஒண்ணு கேட்கலாமா ? ” என்று கேட்டவர் , ” உங்க உடம்பு ஏன் இப்படி இருக்கு ? ” என்கிறார் . ” சின்ன வயசுலேர்ந்தா ? ” என்று மறுபடி கேட்டுவிட்டு பிறகு தலைகவிழ்ந்து மெளனமாக உட்கார்ந்து கொண்டார் . திடீரென்று எதுவோ நினைவில் வந்தது போல் நாஞ்சில் நாடனைப் பார்த்து ” அப்ப நான் சொன்னேனில்லையா , அது..” என்று கட்டைவிரலை குடிப்பதுபோல் காட்டிவிட்டு சிரித்தார். குழந்தைகளின் சிரிப்பில் கனிகிற உற்சாகத்துடன் அவர் கேட்டதும் ” வருது … நண்பர்கள் வாங்கிட்டு வாராங்க ” என்றதும் , மறுப்பது போல் கையை ஆட்டிக்கொண்டே ” சும்மா கேட்டேன் ” என்று தலையாட்டிக் கொண்டார்.

இப்பொழுதெல்லாம் மது அருந்துவதை அனுமதிப்பதில்லை என்று பொருத்தே சொல்கிறார் . இரவில் சிலநாட்களில் பயங்கரமாய் அவஸ்தைப்படும் போது கண்ணில் பார்க்கவே முடியவில்லை . எதுவும் அவசரமென்றால் அந்த ராத்திரியில் யாரையாவது போய் அழைத்துக்கொண்டு வருவது பெரும் சிரமமாய் போய்விடுகிறது . நண்பர்கள் வந்தால் வாங்கிக்கொண்டு வரவேண்டாம் என்று சொல்லிவிடுகிறோம் . என்று அவர் சொல்லுவதை கவனிக்கிற மாதிரியிருந்தவர் , நாஞ்சில்நாடனிடம் குடும்பவிஷயங்களை வெகு அக்கறையாகக் கேட்கிறார். சில மாதங்களுக்கு முன்பு இதய நோய்க்கான சிகிச்சை எடுத்துக்கொண்டது பற்றி சொல்லிய பின் ” ஏன் அப்படி வந்துச்சு ? ” என்று கேட்டார். ” நான் குடிக்கிறேன்ல ” நாஞ்சில் உரத்து பதில் சொன்னார் . ” நீங்க குடிக்கிறேளா ? ” சத்தமாய் சிரித்தார். உடனடியாய் நினைவில் வந்தது போல ” நா கேட்டது வருதோல்லியோ ? ” என்றார்.அதே சிரிப்பும் கனிவுமிருந்தது.

ஜெயமோகனையே உற்றுப் பார்த்திருந்துவிட்டு ” உங்கள நான் எங்கயோ பாத்தா மாதிரியிருக்கு ” என்று ஞாபகங்களைத் துழாபுவர் போல தலை கவிழ்ந்துகொண்டார் . அவரது படுக்கையறையில் போர்ஹேவின் “Labyrinth” பிரதியொன்று கிடக்கிறது . ” அப்பப்ப கொஞ்சம் படிக்கிறேன் ” என்றார்.நெய்தல் கிருஷ்ணனின் உடல்வாகை உற்றிருந்தவராய் மீண்டும் காரணம் கேட்டார் . “சின்ன வயசுலேர்ந்து இப்படியா ” என்று வியப்புடன் சிரித்தார் . “இன்னிக்கு இந்த மீட்டிங்க்ல ஒருத்தர் கூட யோசிக்கறா மாதிரியே பேசல” என்று நாஞ்சில்நாடனிடம் சொன்னார். ” காலேஜ் ஸ்டூடன்ட்ஸ் கிட்ட அப்படித்தான் பேசியாகணும் ” நாஞ்சில் நாடன் பதில் சொன்னதை ஏற்றுக் கொள்ளாத தொனியில் ” இருந்தாலும் ஏதாவது விஷயம் இருக்கணும் ” என்றார்.

சச்சிதானந்ததையே கூர்ந்து பார்த்தவர் ” எதுக்கு இந்தப் பரிசெல்லாம் தர்றீங்க ? ” என்று மீண்டும் கேட்டார் . அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாதவாராய் தயங்கிய சச்சி ” நீங்க ஏன் எழுதுனீங்க ? ” என்றார். அந்தக் கேள்வியை வாங்கிக் கொண்டவராய் தலை கவிழ்ந்து கொண்டார்.தனது சகோதரி மகன் தன்னை குடிப்பது குறித்து கேள்வி கேட்டதை ஆற்றாமையுடன் சொன்னார் . ” இன்னும் குடிக்கறேளா – அதிகாரம் வந்துச்சுன்னா அப்படி கேக்கறான் ” அவர் யார் என்று கேட்கும் போது அவரால் பெயரை நினைவிலிருந்து சொல்லமுடியாமல் போனது.உறவினர்கள் குறித்து நிதானமாய் யோசித்து தகவல்களை சொன்னார்.” யாராச்சும் கேட்டா நான் இவளத்தான் சொல்லச் சொல்வேன் ” . பொருத்தேயை கை காட்டினார்.

” நீங்க ஏன் குண்டா இருக்கேள் ? ” நெய்தல் கிருஷ்ணனிடம் சிரித்துக் கொண்டே தன் கேள்வியைப் புதுப்பித்துக் கொண்டார் .ஹெமிங்வேயின் கடவுளும் கிழவனும் நாவலை எம்.எஸ் மொழிபெயர்த்திருப்பது பற்றி சொன்னதும் ஹெமிங்வேயைப் பற்றிய நினைவுகளில் ஆழ்ந்தவராய் ” அவரோட இன்னொரு நாவல் ரொம்ப நல்ல நாவல் ” என்றார் .FOR WHOM THE BELL TOLLS என்று நினைவுறுத்தியதும் , ” ஆமா… அதான் .. அந்தப் பேரே பாருங்களேன் For whom the bell tolls .. நல்லா இருக்குல்லே ” என்று அந்த வரிகளை சொல்லிப் பார்த்துக் கொண்டார்.

மூன்று அடுக்குகளில் தாவித் தாவிப் பயணித்தபடி இருந்த அவரது இருப்பின் முன்னால் தாளமாட்டாதவைகள் போல் புத்தகங்கள் கலைந்து கிடக்கின்றன . கரையான்கள் அரித்துவிட்ட பக்கங்களுடன் சாய்ந்து நிற்கும் மர அலமாரிகளிலும் , பெஞ்சுகளிலும் குவிந்துள்ள புத்தகங்களைக் கையால் தொடுவதற்கே பயமாயிருந்தது.
புத்தகங்கள் நிறைய குறைந்துவிட்டதென சொன்ன நாஞ்சில்நாடன் இப்போதும் கூட அவர் புத்தகத்தை யாருக்கும் சுலபத்தில் தந்துவிடாத தன்மையுடனே இருக்கிறார் என்று சொன்னார்.

“மணியைத் தெரியுமா உங்களுக்கு ? ” நாஞ்சிலிடம் கேட்டார் . “உங்க தம்பிதானே , பெங்களூர்ல இருக்குறதா சொன்னீங்களே ” அவர்தான் என்பது போல் தலையசைத்தவர் , வழக்கமான இடவெளிக்குப் பிறகு ” அவரிட்ட பேசமுடியுமா நீங்க ? ” என்று கேட்டார் . ” போன் நம்பர் குடுங்க நான் பேசுறேன் ” நாஞ்சில்நாடன் உத்தரவாதமாய்ச் சொல்லிவிட்டு ” ஏன் நீங்க எதும் எழுதுறதில்லையா ? ” என்று கேட்க முடிவதில்லை என்ற இயலாமையுடன் கைவிரித்தார்.எழுத்துகளைத் தொலைத்துவிட்ட அந்த நரைழுத்த கைகளின் நடுக்கத்தை பொருள்படுத்தாமல் இருக்க முடியவில்லை. ” ஏதும் சமாச்சாரம் சொல்லணுமா அவரிட்ட ? ” நாஞ்சிலின் கேள்விக்கு வெகுநேரம் எடுத்துக் கொண்டார் . மெளனமும் தடுமாற்றமுமாய் தலைகவிழ்த்தவர் மெதுவாகச் சொன்னார்.
” பாத்தா தேவலை ” கட்டாயம் மணியிடம் பேசுவதாய் நாஞ்சில் தொலைபேசி எண்ணைக் கேட்க , மெதுவாக எழுந்தார். தரையில் பாதங்கள் உராய மெல்ல நடந்தவர் வலது பக்க அறைக்குள் போனார்.மஞ்சள் விளக்கொளியில் புத்தகங்கள் கிடக்க குறுக்கும் நெடுக்குமாய் இருமுறை நடந்தார். அறைக்குள் எட்டிப்பார்த்த நண்பரைப் பார்த்து சிரித்துவிட்டு ” இங்கு தான் இருக்கும் ” என்று புத்தக அடுக்குகளில் துழாவினார். சிறிது நேரத்துக்குப்பின் ரப்பர்பேண்ட் போட்டு கிறுக்கப்பட்ட டயரி ஒன்றை எடுத்துப் பிரித்தார்.காகிதங்களும் கடிதங்களுமாய்ப் புடைத்திருந்த டயரியை நிதானமாகத் தேடியவர் அந்த எண்ணைக் கண்டு நாஞ்சிலிடம் சொன்னார்.

கரையான் அரித்த புத்தகங்களுக்கு நடுவில் மங்கிய விளக்கொளியில் நின்றிருந்த அந்த உருவமும் , அவரது சிரிப்பும் காலத்தின் அவசரத்தை கேலி செய்வது போலிருந்தது.

விடைபெற்றுக் கொண்டு படியிறங்குகையில் , தோட்டத்தின் இருளினூடே இலைகளின் சலசலப்பு , லேசான குளிர் , எதையும் அறியாத உறைதன்மையுடன் வீற்றிருந்த வீட்டினுள் நகுலனின் தளர்ந்த உருவம் எங்களையே பார்த்துக்கொண்டு நிற்கிறது – அவரது எழுத்துக்களைப் போல !

Blog at WordPress.com.